போன பதிப்பில் வெண்பா எழுதுவது ஈசி... எழுதலாம் வாங்கன்னு சொன்னேன்.
அப்புறம் இணையத்தில் படிச்சப்போ வெண்பா வகை, வெண்பாவினம்னு இரண்டு இருக்கு. என்னனு பாக்கலாமா...
இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, ஆசிடை நேரிசை வெண்பா... இவை மூன்றும் போன பதிப்பில் பார்த்தோம்... இவை எல்லாமே வெண்பா வகை.
வெண்பா மொத்தம் 5 வகைப்படும்.
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
பஃறொடை வெண்பா
குறள் வெண்பா
இரண்டடிகளில் அதாவது 7 சீர்களில் வெண்பா இலக்கணத் தோடு வரும்....
எல்லா திருக்குறள்களும் குறள் வெண்பாக்களே...
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அது சரி.... வேறு ஏதாவது எ.கா?
இதோ அடியேனின் படைப்பு
இயேசுவே ஆண்டவர் ஆதலால் என்றும்
இயேசு பணிந்திடு வோம்
நேரிசை வெண்பா
4 அடிகள்
இரண்டிரண்டு அடிகளாகப் பிரித்தால் 2 குறள் வெண்பாக்களும், ஒரு தனிச்சொல்லும், அல்லது ஒரு தனிச்சொல் முன்னே முதல் குறட்பாவின் ஈற்றுச் சீர் தனிச்சொல்லோடு தளைய ஆசு எனும் ஓரசை அல்லது ஈரசைச் சீரும் வரும்.
அதாவது
நேரிசை வெண்பா = 1 குறள் வெண்பா + தனிச்சொல் +1 குறள் வெண்பா
அல்லது
1 குறள் வெண்பா +ஆசு+ தனிச்சொல் +1 குறள் வெண்பா
எ.கா:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு -இகத்திலோ
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
- இரு விகற்ப நேரிசை வெண்பா
குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
தனிச்சொல்: இகத்திலே
குறள் 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
எ. கா 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்நாம்முன் -கற்ற
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
-இரு விகற்ப ஆசிடை நேரிசை வெண்பா
குறள் 1
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
ஆசு: நாம்முன்
தனிச்சொல்: கற்ற
குறள் 2
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
நேரிசை வெண்பா ஒரு விகற்பத்தாலும் இருவிகற்பத் தாலும் வரும்.
ஒரு விகற்ப நேரிசை வெண்பா எ.கா.
உயிரீந்து மற்றவர்க்குச் செத்தவர்; வென்றே
உயிர்த்தெழுந்தார் சாவைச் சிறந்து -உயிரீந்
துயிர்த்தோன் பிறனுக்கு, யாருமில்லை இங்கே,
உயிர்த்தவர் யேசு பணிந்து
- இயேசு வெண்பா
இன்னிசை வெண்பா
இன்னிசை வெண்பா என்பது 4 அடிகளால் ஆன, நேரிசை வெண்பா இலக்கணத்தில் எந்த ஒரு விதியேனும் தவறினால் அது இன்னிசை வெண்பா....
எ.கா.
என்னப்பா எல்லாமே சொல்லிக் கொடுக்கோனும்?
என்னப்பு யாப்புன்னு சொல்லி பயமுறுத்த
என்னா தலைகிலைன்னு சொல்றீர் புரியல
என்னைச்சொல் லோனும் படி
இதில் வரும் இரண்டாம் அடி இறுதிச்சீரானது முதலடி முதற்சீர், இரண்டாமடி முதற்சீருடன் விகற்பமில்லாது பயின்றுள்ளது. ஆதலால் இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா.
சிந்தியல் வெண்பா
3 அடிகள் வரும். இன்னிசை யாகவும், நேரிசையாகவும் வரும்.
எ.கா.
என்னப்பா எல்லாமே சொல்லிக் கொடுக்கோனும்?
என்னப்பு யாப்புன்னு சொல்லி பயமுறுத்த
என்னா தளையென்றுக் கூறு
- ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா
என்னப்பா எல்லாமே சொல்லிக் கொடுக்கோனும்?
என்னப்பு யாப்புன்னு சொல்லியே -என்னைதான்
அச்சுறுத்து கின்றாயே நீ
- இரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா
பஃறொடை வெண்பா
>4 அடிகள் கொண்டு வெண்பாவின் இலக்கணம் பயின்று வந்தால் பஃறொடை வெண்பா. 12 அடிக்கு மிகாது எனவும் கூறுவர். 13 அடிக்கு மேல் கலிவெண்பா என்று அழைக்கப்படுவதும் உண்டு.
எ.கா:
மறைகூறு விண்ணரசு பற்றித் தெளிவாய்
மறைநூல் அறிஞரெல்லாம் தம்கருவூ லத்தின்
மறைபொருள் அள்ளி புதிய பழைய
மறைவெளியே கொண்டு வரும்வீட் டுரிமை
மறையாளர் போலிங்கு தான்
- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
- இயேசு வெண்பா
இவையே வெண்பா வகைகள்.
No comments:
Post a Comment