மேலும் சில விதிகள், புறனடைகள்

புறனடைகள் 


எல்லா பாக்களுக்கும் சிற்சில விதி மீறல்கள், புறனடைகள் உண்டு. அது போல் வெண்பாவிலும் உண்டு. ஆனால் இவை மிகையாக வராது. ஆயினும் நூலோர் புலவரின் எண்ணமே முதன்மையெனக் கருதி சில புறனடைகள் உண்டு.

குற்றியலுகரம், குற்றியலிகரம்


கு, சு, டு, து, பு, று இவை குற்றியலுகரம்
கி, சி, டி, தி, பி, றி இவை குற்றியலிகரம்

சில இடங்களில் குற்றிய லுகரமும், குற்றிய லிகரமும் அலகிடாது விட்டால்தான் வெண்டளை வரும்.

எ.கா 1: (குற்றிய லிகரம்)

அருளல்ல தியாதெனில் கொல்லாமை கோறல் 
பொருளல்ல தவ்வூன் தினல்.

திருக்குறள், 254

இந்த குறளில் உள்ள முதலிரண்டு சீர்களை அலகு பிரித்தால்

அரு/ளல்/ல     தியா/தெனில்
2/1/1             2/2 
புளிமாங்காய் - கருவிளம்

காய் முன் நிரை வெண்பாவில் வாராது.

வள்ளுவன் வெண்பாவில் தவறு செய்தாரா? வெண்டளை இல்லாத கலித்தளை பயின்று வருகிறதே என்று ஆராய்ந்து பார்த்தேன். புறனடைகளை அறிந்தேன். தியாதெனில் என்பதை யாதெனில் என்று அலகிடல் வேண்டும் என்பதை அறிந்தேன்.

எ.கா 2: (குற்றியலுகரம்)


நீதியின்மேல் தாகம் பசியுடையோர்ப் பேறுபெற்றோர்;
நீதி யடைவர் நிறைவதை -நாதி
இரக்கமுள்ளோர்ப் பேறுபெற்றோர்; தாங்கள் பெறுவர்
இரக்கத்தை இங்குச் சிறந்து

- இயேசு நாதர் வெண்பா - 190

இந்த வெண்பாவில் பேறுபெற்றோர் என்ற சொல்லை அலகு பிரித்தால்

பே/றுபெற்/றோர் கூவிளங்காய் வரும்.

ஆயினும் படிக்கும் போழ்து அது பேறு பெற்றோர் என்று படித்தாலே செப்பலோசை வரும்.

ஆதலால் அதை 

பே/று/பெற்/றோர் என்று நான்கசை சீராகவே பிரிப்பது சரி. நான்கசை சீர் வெண்பாவில் வராது. ஆதலால் இங்கு உள்ள குற்றியலுகரம் 'று' அலகிடாது விட்டால்

பே/பெற்/றோர் என்று தேமாங்காய் வந்து வெண்பா இலக்கணம் பிழறாமல் வரும். 

விளாங்காய்



வந்துசேர்ந்தாய்
வெண்ணிலாவில்
மேய்த்தவாயன்


இந்த மூன்று சொற்களை அலகிடுங்கள்


வந்/துசேர்ந்/தாய் = கூவிளங்காய்
வெண்/ணிலா/வில் = கூவிளங்காய்
மேய்த்/தவா/யன் = கூவிளங்காய்


ஆனால் எழுதப்படாத விதி கூவிளங்காயோ, கருவிளங்காயோ
விளாங்காயாக வந்தால் செப்பலோசை கெடும் எனக் கருதுவர்.


ஆதலால் விளாங்காய் வருவதை தவிர்ப்பது நன்று.


எ.கா:


கொண்டவர் சென்றனர் அப்பணியாள்; சாறதைக்;
கண்டான் சுவைப்பந்தி மேலாளும் -கண்டவன்
நற்சுவையை, பின்மணாளன் நோக்கியே நீரிப்போ
நற்சாறு யேன்கடையில் தந்து?

இயேசு நாதர் வெண்பா - 180


இந்த வெண்பாவில் பின்மணாளன் என்பது கூவிளாங்காய் என வந்துள்ளதால் மாற்றி


கொண்டவர் சென்றனர் அப்பணியாள்; சாறதைக்;
கண்டான் சுவைப்பந்தி மேலாளும் -கண்டவன்
நற்சுவையை, பின்மணவாள் நோக்கியே நீரிப்போ
நற்சாறு யேன்கடையில் தந்து?


பின்மணவாள் என எழுதியுள்ளேன்.


அதே வெண்பாவில் யேன்கடையில் என்று ஐகார குறுக்கம் வருவதை காண்க...


யேன்கடயில் என்றே அது ஒலிப்பதால் அது கூவிளாங்காய் ஆகாது.

No comments:

Post a Comment